சிதம்பரம் அண்ணாமலைநகர் ரயில்வே மேம்பாலத்தில் சாலையில் நடுவே வைக்கப்பட்ட மண் மூட்டைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும் சாலையோரத்தில் பொதுப் பணித் துறை ஊழியர்கள் அண்மையில் சுத்தம் செய்தனர். அப்போது, சேகரித்த மண் குவியலை சாக்கு மூட்டையில் கட்டி பாலத்தின் மையப் பகுதியில் வரிசையாக வைத்து விட்டு சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் தடுமாற்றத்துடன் வாகனத்தை இயக்க வேண்டியுள்ளது. விபத்துக்களும் நேரிடுகின்றன. குறிப்பாக, இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மண் மூட்டைகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், மேம்பாலத்தில் மின் விளக்குகள் சரிவர எரியவில்லை எனவும் புகார் கூறப்படுகிறது.
எனவே, மண் மூட்டைகளை உடனடியாக அகற்றிவிட்டு, மேம்பாலத்தில் மின்விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.