ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, விழுப்புரத்தில் புதன்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயலும் மத்திய அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மண்டலச் செயலர் மருத்துவர் விக்ரம் தலைமை வகித்தார். கள்ளக்குறிச்சி மண்டலச் செயலர் சர்புதீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். விழுப்புரம் மாவட்டம், புதுவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாம் தமிழர் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை மாவட்டப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி விவசாயத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இத்தகைய இயற்கை அழிவுத் திட்டங்களை நிறுத்தி, விவசாயிகளையும், மக்களையும் வாழவிட வேண்டும் என்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மக்களுக்கு விநியோகம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, நாம் தமிழர் கட்சியினர் 66 பேரை, விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமால், மேற்கு காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.