ஊராட்சி செயலர் நியமனம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி மக்கள் மனு அளித்தனர்.
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி. இதில், அரிசிபெரியாங்குப்பம், குமாரபேட்டை, கன்னிமாநகர், எம்.புதூர், மாவடிபாளையம் ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன.
இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் திரளானோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அளித்த மனு மனுவில் தெரித்துள்ளதாவது:
அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய நபர் பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்பாக 2018-ஆம் ஆண்டு கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு மற்றொரு ஊராட்சியில் பணி நியமனம் பெற்று அங்கு பணியாற்றி வருகிறார். தற்போது அவர் மீண்டும் அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தரச் செயலராக வருவேன் என்று கூறி வருகிறார். ஏற்கெனவே அவரால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, அவரை மீண்டும் அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சிக்கு செயலராக நியமிக்கக் கூடாது. அவர் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை, குண்டும், குழியுமான சாலை, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்காதது குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனர்.