தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைதுசெய்யப்பட்டார்.
திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய ஆய்வாளர் அ.குமரய்யா தலைமையில் போலீஸார் திருவந்திபுரம் சாலக்கரை பகுதியில் கடந்த மே மாதம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முள்புதரில் லாரி டியூப்களில் 150 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக பில்லாலித் தொட்டியைச் சேர்ந்த ஆ.பாபு (57) என்பவரைக் கைது செய்தனர். தொடர் விசாரணையில் இவர் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், பண்ருட்டி மதுவிலக்குப் பிரிவில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
எனவே, இவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புக் காவலில் கைது செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரைத்தார். அதனடிப்படையில் அதற்கான உத்தரவை ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாபு கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.