ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்புன
By DIN | Published On : 24th June 2019 07:40 AM | Last Updated : 24th June 2019 07:40 AM | அ+அ அ- |

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை பெறும் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, முதல்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவியானது, 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும், அதாவது சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இதற்காக, கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்துகொள்ளும் வாரிசுதாரர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வருகிற 30-ஆம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேரலாம்.
இதற்கென தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.