அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட கருவூலம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன் விளக்க உரையும், மாநிலச் செயலர் என்.ஜனார்த்தனன் நிறைவுரையும் ஆற்றினர். சாலைப் பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கே.ரவி, பொதுப் பணித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் வெங்கடாஜலபதி, மருத்துவத் துறை நிர்வாக ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன், சமூக நலத் துறை ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் பா.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கணினி மூலமாக சம்பளம் வழங்கிட புதியதாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டம் என்ற மென்பொருள் உருவாக்க சுமார் ரூ.300 கோடி ஒரு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இந்தப் பணியை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தச் சூழலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு உடனடி விளக்கம் கிடைக்கப்பெறாத நிலையில் சம்பளப் பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அப்படி வழங்காவிட்டால் சம்பளம் கிடைக்காது என்ற தொனியில் மிரட்டும் போக்கை அரசு கைவிட வேண்டும். மேலும், அடிப்படை கட்டமைப்புகளை முழுமையாக முடிக்கும் வரை பழைய முறையிலேயே சம்பளப் பட்டியலை தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
முன்னதாக, சங்கத்தின் மாவட்ட இணைச் செயலர் எஸ்.வெங்கடேசன் வரவேற்க, மாவட்ட பொருளாளர் டி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.