வரும் 28-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதியன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டு, மாற்று தேதியாக வருகிற 28-ஆம் தேதி இந்தக் கூட்டம் நடத்தப்படும். எனவே, மாவட்டத்திலுள்ள 683 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அறிக்கை மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். மேலும், குடிநீர் பிரச்னை, தூய்மை இந்தியா திட்டம், நூறு நாள் வேலைத் திட்டம் உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் பொதுமக்கள் கலந்துபேசி தீர்வு காண வேண்டும் என ஆட்சியர் அதில் வலியுறுத்தி உள்ளார்.