மழை பெய்ய வேண்டி, விருத்தாசலம் அருகே உள்ள முகாசபரூரில் அமைந்துள்ள புனித.அந்தோணியார் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் பெண்கள் மத வேற்றுமையைக் கருதாமல் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இவர்கள், மழை வேண்டி பொங்கல் வைப்பதற்காக தங்களது வீடுகளிலிருந்து பொங்கல் பானை, அரிசி உள்ளிட்ட பொருள்களுடன் புனித. அந்தோணியார் ஆலயத்துக்கு ஊர்வலமாக வந்தனர். ஆலயத்தில் இந்தப் பொருள்களை வைத்து மழை வேண்டி சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, அந்தப் பொருள்களை கிராம மக்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு கொண்டுசென்று பொங்கலிட்டு அவரவர் மத வழக்கப்படி வழிபாடு நடத்தினர். மழை வேண்டி மத வேறுபாடுகளைக் கடந்து கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டது வரவேற்பைப் பெற்றது.