கடலூர் அருகே லாரி கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்தனர்.
சிதம்பரத்திலிருந்து உப்பு பாரம் ஏற்றிய லாரி கடலூர் நோக்கி திங்கள்கிழமை நள்ளிரவில் வந்துகொண்டிருந்தது. லாரியை நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (41) ஓட்டிவந்தார். விருதுநகரைச் சேர்ந்த ராஜா உதவியாளராக உடனிருந்தார். கடலூர் முதுநகர் அருகே சங்கொலிகுப்பம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரமாக கவிழ்ந்து (படம்) விபத்துக்குள்ளானது. இதில், லாரி ஓட்டுநர், உதவியாளர் ஆகியோர் காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும், உப்பு முழுவதும் கீழே கொட்டி வீணானது.
மின் கம்பத்தில் டிரெய்லர் மோதல்: இதேபோல, இரண்டு டிரெய்லர்களில் சவுக்கு மரங்கள் பாரம் ஏற்றப்பட்ட டிராக்டர் கடலூர் முதுநகர் வழியாக திங்கள்கிழமை இரவு சென்றது. சாலக்கரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே சென்றபோது ஒரு டிரெய்லர் டிராக்டரிலிருந்து கழன்று அருகே இருந்த மின்கம்பம் மற்றும் வீட்டின் மோதி மோதியது. இதில், மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் முதுநகர் போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.