கடலூர் மாவட்டம், நெய்வேலியில் வியாழக்கிழமை இரவு பைக் மோதியதில் தாய், குழந்தை உயிரிழந்தனர்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்கு மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரபாகரன்(24). கூலித் தொழிலாளி. இவர் வியாழக்கிழமை தனது மனைவி மகாலட்சுமி (23), மகன் பிரசாத் (3) ஆகியோருடன் நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பைக்கில் வந்தார். பொருள்கள் வாங்கி முடித்த பிறகு மூவரும் பைக்கில் புறப்பட்டனர். ஆனால், பெட்ரோல் தீர்ந்ததால் பாதி வழியில் பைக் நின்றுவிட்டது. இதையடுத்து, பிரபாகரன் பைக்கை தள்ளிக்கொண்டு சென்றார்.
நெய்வேலி வட்டம்-1, என்எல்சி தலைமை அலுவலகம் அருகே ஜோதி ராமலிங்கர் சாலையை இரவு 7.30 மணியளவில் மூவரும் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் மோதியதில் பிரபாகரன், மகாலட்சுமி, பிரசாத் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து, மூவரும் என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மகாலட்சுமி, குழந்தை பிரசாத் ஆகியோர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த பிரபாகரனை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நெய்வேலி நகரிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.