ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்கலை. முன்னாள் ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கு.பாலா (எ) பாலசுப்ரமணியன் (41). பல்கலைக்கழக முன்னாள் ஊழியரான இவர், அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தாராம்.
அந்த வகையில், 2011-13 ஆம் ஆண்டு கால கட்டத்தில் 56 பேரிடம் ரூ. 37.66 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு பணத்தைத் திரும்ப வழங்கவில்லையாம். இதுகுறித்து, சீட்டுக் கட்டிவந்த சித்ரா கடலூரில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடலூர் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாலா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி, 3 பிரிவுகளின் கீழ் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.