விருத்தாசலத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் பல்வேறு உபகரணங்கள் கல்வி சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
விருத்தாசலம் திரு.வி.க. நகரில் நகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திரு.வி.க. நகர், தாஷ்கண்ட் நகர், திருவள்ளுவர் நகர், அண்ணாநகர், செல்வராஜ் நகர், நரிக்குறவர் காலனி, பாரதி நகர், டிரைவர் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள் சுமார் 80 பேர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட்லாசர் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழ்செல்வி, கலைச்செல்வி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
விழாவில், கல்வி, விளையாட்டுத் திறன் மேம்பாட்டுக்கு தேவையான சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்களை பொதுமக்கள் கொண்டு வந்தனர். மேலும், பள்ளியில் சேரும் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
இந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி, சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளில் சிறந்து விளங்குவதால் தனியார் பள்ளி மாணவர்கள் பலர் இந்தப் பள்ளியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறினர்.