சிதம்பரம் அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட ஆந்திர மாநில சிறுவர்கள் 3 பேர் மீட்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கந்தன் (47). வாத்து மேய்க்கும் தொழிலாளி. இவர் ஆந்திரம் மாநிலம், கடப்பா பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள் அஞ்சலி (12), வெங்கட்ராமன் மகன் நாகா (8), சித்தூர் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் மகள் ரூத்ரம்மா (13) ஆகிய 3 பேரையும் அவர்களது பெற்றோரிடம் பணம் கொடுத்து கொத்தடிமையாக தில்லைவிடங்கன் கிராமத்துக்கு அழைத்து வந்தார். அவர்களை வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சி.முட்லூர் பகுதிக்குச் சென்றனர். அந்தப் பகுதியினர் 3 பேரையும் மீட்டு சிதம்பரம் நகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் 3 பேரிடமும் விசாரணை நடத்தி, அவர்களது பொற்றோர் குறித்த விவரங்களை அறிந்துகொண்டனர். பின்னர், அவர்களை தொடர்புகொண்டு சிதம்பரத்துக்கு வருமாறு தகவல் அளித்தனர். இதனையடுத்து, 3 பேரின் பெற்றோரும்
சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தனர். அவர்களுக்கு காவல் துறையினர் அறிவுரை வழங்கி, மீட்கப்பட்ட 3 சிறுவர்களையும் ஒப்படைத்து ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.