பறக்கும் படை சோதனையில் ரூ.5.20 லட்சம் பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.5.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 


கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.5.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் உதவி தேர்தல் அலுவலர் முகமது அசேன் தலைமையில் சனிக்கிழமை சிறுபாக்கம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டதில் ரூ.4.27 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. 
அந்தக் காரிலிருந்த சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த பெரியார் நகரைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பாஜக நிர்வாகியிடம் விசாரணை: அதேபோல, அந்த வழியாக வந்த மற்றொரு காரை சோதனையிட்டதில், அந்தக் காரிலிருந்த  நெய்வேலியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மனைவி ரம்யாவின் கைப் பையில் ரூ.93 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்தக் காரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், குதிரைப்பந்தல் காரையூரைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் விழுப்புரம் மேற்கு மாவட்ட பாஜக செயலர் மகேந்திரன் (33) என தெரியவந்தது. ரம்யா காரில் பணத்தை கொண்டுசென்றதால் அவருக்கு பாதுகாப்பாக பின்தொடர்ந்து வந்ததாக அவர் தெரிவித்தாராம். ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் பணம், கார், பைக் ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், மகேந்திரன், ரம்யாவை திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com