பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கடலூரில் பல்வேறு அமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு, சிஐடியூ தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம் ஆகியன சார்பில் கடலூரில் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவர் சங்க நகரச் செயலர் சு.தமிழ்மணி தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகரத் தலைவர் சாந்தகுமாரி, சிஐடியூ மாவட்ட செயலர் பி.கருப்பையன், மாவட்ட தலைவர் பி.பாஸ்கரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன், செயலர் தட்சணாமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலர் தேன்மொழி, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு நலச் சங்கம் ஆர்.ஆளவந்தார், இந்திய மாணவர் சங்கம் விக்கி உள்பட பலர் கண்டன உரையாற்றினர். முன்னதாக முழக்கப் போராட்டமும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சமூக விரோதிகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரசு ஊழியர் சங்கம்: இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட இணைச் செயலர் எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் கே.மணவாளன், தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கே. இரவி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலர் சி.மச்சேந்திரன், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலர் ஏ.இராஜேந்திரன், தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பூபாலசந்திரன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநிலச் செயலர் டி.புருசோத்தமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலர் எல்.அரிகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் டி.இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.