கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மனநலம் குன்றிய சிறுமியை கர்ப்பமாக்கியது தொடர்பாக 5 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள கீழக்கடம்பூரைச் சேர்ந்தவர்கள் க.பாலு (53), ரா.விநாயகம் (55), ரா.ராமலிங்கம் (60), முனுசாமி மகன் வேல்முருகன் (25), மேலக்கடம்பூர் வைத்தியலிங்கம் மகன் வீராசாமி (36).
இவர்கள் கீழக்கடம்பூரில் பூந்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்தனர். இவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பிஸ்கெட், சாக்லெட் வாங்கி கொடுப்பது வழக்கமாம்.
இந்த நிலையில், 5 பேரும் கடந்த 4 மாதங்களாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தனராம்.
ஒவ்வொரு நபரும் மற்றவருக்கு தெரியாமல் அதனைச் செய்து வந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறினர். இதுதொடர்பாக சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆக்னேஸ்மேரி, உதவி ஆய்வாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், 5 பேரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலைசெய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த 5 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.