சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர், சிதம்பரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சிதம்பரம் மக்களவை தனி தொகுதியில், அரியலூர் மாவட்டம் பொய்யாநல்லூரைச் சேர்ந்த அதிமுக வேட்பாளரான பொ.சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
அவர் செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். சிதம்பரம் வடக்குவீதியில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளையும், தெற்குவீதி ஏ.ஆர்.மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், தேவதாஸ் படையாண்டவர், மாவட்டச் செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பின்னர், மேலவீதி பெல்காம் சத்திரத்தில் தேமுதிக நிர்வாகிகள் சிவக்கொழுந்து, உமாநாத், பாலு மற்றும் நிர்வாகிகளையும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏ, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி, கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ (சிதம்பரம்),
நாக.முருகுமாறன் எம்எல்ஏ (காட்டுமன்னார்கோவில்), முன்னாள் அமைச்சர் செல்வி.ராமஜெயம், முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்திரகாசி எம்பி புறக்கணிப்பு: தற்போதைய சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரான மா.சந்திரகாசி, அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் ஆதரவு திரட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தனக்கு மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், நிகழ்ச்சியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.