கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் செங்குந்த மரபினருக்கு சொந்தமான அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பங்குனி உத்திர கொடியேற்ற விழா 12 ஆம் தேதி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வள்ளிதேவசேனா சமேதராக சிவசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, திருத்தேர் நிலையை அடைந்த பின்னர், படிபூஜை செய்யப்பட்டு உற்சவர்கள் கோயிலினுள் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இரவில் மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வியாழக்கிழமை காவடி எடுக்கும் நிகழ்ச்சியும், பங்குனி உத்திர சிறப்பாக மதியம் 108 சங்கு பூஜை, யாகசாலை, கலச பூஜைகளும் நடைபெறுகின்றன. இரவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.