பண்ருட்டி அருகே வெள்ளிக்கிழமை வீடுகள் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பண்ருட்டி அருகே உள்ள கோ.குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 10 பேர் அங்குள்ள மைதானத்தில் வெள்ளிக்கிழமை கைப்பந்து விளையாடினர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த மேல்கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லெனின், சீத்தாராமன் ஆகியோர், இங்கு ஏன் விளையாடுகிறீர்கள் என சிறுவர்களிடம் கேட்டனராம். இதனால்,
இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தப் பகுதியினர் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், லெனின், சீத்தாராமன் இருவரும் மேல்கவரப்பட்டில் வசிக்கும் தங்களது உறவினர்களை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு சம்பவத்தை தெரிவித்தனர். இதையடுத்து மேல்கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கோ.குச்சிப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், கலியபெருமாள், சுப்புராயன் உள்ளிட்டோரது வீடுகளில் ஓடுகள் சேதமடைந்தன. மேலும், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் தயாளன், புவனேஷ், ரகுபதி ஆகியோர் காயமடைந்து, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ப.சரவணன், பண்ருட்டி வட்டாட்சியர் கீதா, டிஎஸ்பி நாகராஜன், ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர். இருதரப்பினரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க ஏடிஎஸ்பி அசோக்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கோ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் தயாளன் அளித்த புகாரின்பேரில், மேல்கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், லெனின், சீத்தாராமன், திவான், திவாகர், தர்மராஜ், தவசி, சண்முகபாண்டியன் மற்றும் 10 பேரை தேடி வருகின்றனர்.
இதேபோல, தர்மராஜ் அளித்த புகாரின்பேரில் தயாளன் என்பவரை கைது செய்த போலீஸார் ரகுபதி, பன்னீர், சந்தோஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.