இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் கடலூரில் வருகிற ஜுன் 7- ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மற்றும் புதுவையை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
இந்த முகாம் தொடர்பாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வருகிற ஜுன் 7 முதல் 17-ஆம் தேதி வரை இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் வேலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். கடலூர் மாவட்ட இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.சந்தோஷினி சந்திரா, ராணுவ கர்னல் தருண்துவா, மேஜர் பிரஜேஷ், சுபேதார் மேஜர் எஸ்.எம்.பட், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) தெய்வசிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.