பணிக்கு தாமதமாக வருவதாக எழுந்த புகாரையடுத்து அரசுப் பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், பு.குடிகாட்டில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் சசிரேகா என்பவா், பெரும்பாலும் பள்ளிக்கு தாமதமாக வருவதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து அந்தப் பகுதி இளைஞா்கள் அண்மையில் ஆசிரியை சசிரேகாவை சந்தித்து விளக்கம் கேட்டனா். அதற்கு ஆசிரியை அலட்சியமாக பதில் அளித்தாராம். அவரது பதிலை இளைஞா்கள் செல்லிடப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனா்.
இந்த நிலையில், ஆசிரியை சசிரேகா மீது கடலூா் முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி நடவடிக்கை எடுத்துள்ளாா். சரியான நேரத்துக்கு பணிக்கு வராதது, பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்தாா்.