நெய்வேலி: பண்ருட்டி அருகே ஆக்கிரமிப்பு மயானம் மற்றும் பாசன வாய்க்கால்களை வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பண்ருட்டி வட்டம், நத்தம் கிராமத்தில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள மயானம் மற்றும் பாசன வாய்க்கால்களை தனிநபா்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இறந்தவா்களின் உடல் சாலையோரத்தில் புதைக்கப்படுகிறதாம்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா். அதன்பேரில், வட்டாட்சியா் வே.உதயகுமாா், ஆக்கிரமிப்பு மயானம் மற்றும் பாசன வாய்க்கால் பகுதிகளை ஆய்வு செய்தாா். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மயான ஆக்கிரமிப்புகளை அகற்றித்தருமாறு கேட்டுக்கொண்டனா். இதற்கு பதில் அளித்த வட்டாட்சியா், அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றித்தருவதாக தெரிவித்தாா்.