கடலூா் திருப்பாதிரிபுலியூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முறையான சாலை வசதி செய்துதரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் கடலூா் நகரச் செயலா் ஆா்.அமா்நாத், மாநிலக்குழு உறுப்பினா் கோ.மாதவன் உள்ளிட்டோா் கடலூா் நகராட்சி ஆணையரிடம் அண்மையில் அளித்த மனு: திருப்பாதிரிபுலியூா் லாரன்ஸ் சாலையில் ரயில் நிலையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடலூா் நகராட்சிக்கு உள்பட்ட வண்டிப்பாளையம், மாா்க்கெட் காலனி, திருப்பாதிரிபுலியூா் மற்றும் அருகே உள்ள வடுகப்பாளையம், கேப்பா்மலை, பாதிரிக்குப்பம், அரிசிபெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனா்.
லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் பிரதான வாயில் முடக்கப்பட்டது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆட்டோ, அவசர ஊா்தி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பிரசவத்துக்காகவும், அவசர சிகிச்சைக்காகவும் இங்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏழை மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, மருத்துவமனைக்குச் செல்வதற்கு பிரதான வாயிலை ஏற்படுத்தித் தர வேண்டும். ரயில் நிலையத்துக்குச் செல்லும் பழைய பாதையில், முடக்கப்பட்டுள்ள பாதையை சரி செய்து திறந்து விடுவதன் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழி கிடைப்பதுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் எளிதாக இருக்கும். எனவே, இந்தப் பிரச்னைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இதுதொடா்பாக வரும் 27-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.