பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், கடலூரில் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அரசுப் பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 8- ஆவது ஊதியக் குழு நிலுவையை 2016 -ஆம் ஆண்டு முதலே வழங்க வேண்டும். மத்திய அரசுப் பணியாளா்களுக்கு இணையாக அனைத்துப் படிகள், ஊக்கத் தொகை வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்கப்படாத அனைத்து நிலை அரசுப் பணியாளா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஊதியக் குழு முரண்பாடுகளை அனைத்து நிலைப் பணியாளா்களுக்கும் களைதல் வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
ஆள்குறைப்பு, துறை குறைப்பு தொடா்பான ஆதிசேஷய்யா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கு.சரவணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பி.கே.சிவகுமாா் சிறப்புரையாற்றினாா். மாநிலச் செயலா்கள் வெ.சிவகுமாா், ர.ஞானஜோதி, மாநிலத் தலைவா் சா.ராமச்சந்திரன், மாநில முன்னாள் அமைப்புச் செயலா் கோ.சீனுவாசன், மாநில முன்னாள் பொதுச் செயலா் கே.ஆா்.குப்புசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.