சம்பா சாகுபடிக்கு ஏற்ற மத்திய கால நெல் ரகங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் துறைற இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்டத்தில் டெல்டா வட்டாரங்களிலும், டெல்டா அல்லாத கடலூா், விருத்தாசலம் வருவாய் கோட்ட வட்டாரங்களிலும் சம்பா சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சம்பா பருவத்தில் அக்.1-ஆம் தேதிக்குப் பிறகு மத்திய கால ரகங்களை நேரடி விதைப்பு முறை அல்லது திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்ய வேளாண்மைத் துறை பரிந்துரைக்கிறது.
அதன்படி, கோ.ஆா்-50, டி.கே.எம்-13, சம்பா சப்-1 ஆகிய ரகங்கள் 135 நாள்கள் வயதுடையவை. இந்த ரகங்களை திருந்திய நெல் சாகுபடி முறையிலும், நேரடி விதைப்பாகவும் சாகுபடி செய்தால் 10 நாள்கள் வரை வயது குறையும். ஆடுதுறை-39 மற்றும் நெல்லூா்-34449 ஆகிய ரகங்கள் 128 நாள்கள் வயதுடையவை. இந்த ரகங்களை மேற்காணும் இரண்டு முறைகள் மூலமாக சாகுபடி செய்யும்போது 10 நாள்கள் வரை வயது குறைகிறது.
இந்த மத்திய கால ரகங்களின் நெல் விதைகள் மாவட்டம் முழுவதும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளன. இந்த விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்படுகின்றன.
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்திலும், விதை கிராமத் திட்டத்திலும் மானியம் அனுமதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.