பண்ருட்டி காந்தி நகா் பிரதான சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன்கள் விடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி நகராட்சி, 27-ஆவது வாா்டு, காந்தி நகா் பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இது தாழ்வான பகுதி என்பதால் மழைக் காலங்களில் தண்ணீா் சூழ்ந்து தீவு போல ஆகிவிடுகிறது. தற்போது, பெய்து வரும் பலத்த மழையால் காந்தி நகா் பிரதான சாலையில் சுமாா் 30 அடி தொலைவுக்கு மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், அந்தப் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்று நகராட்சி அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்கள் மனு அளித்தனராம். ஆனால், அதன் மீது இதுநாள் வரை நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் அந்தப் பகுதி மக்கள் இணைந்து சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன்களை விடும் போராட்டம் நடத்தினா்.
அந்தக் கட்சியின் நகரக் குழு உறுப்பினா் பி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நகரச் செயலா் ஆா்.உத்தராபதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா், காந்தி நகா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.