தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் வட்டம், ஆலடியில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர் கண்ணன் வழிமறித்து தாக்கப்பட்டதைக் கண்டித்தும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.அல்லிமுத்து தலைமை வகித்தார். செயல் தலைவர் கு.சரவணன், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கோ.சீனுவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரசுப் பணியாளர்கள் சங்க முன்னாள் மாவட்ட செயலர் மு.ராசாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட பணியாளரின் மருத்துவச் செலவு முழுவதையும் டாஸ்மாக் நிர்வாகமே ஏற்க வேண்டும்.
டாஸ்மாக் நிர்வாகத்தினரே நேரடியாக கடைகளுக்குச் சென்று விற்பனை பணத்தை வசூலிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.