அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, வரும் 15-ஆம் தேதி காலை 7 மணிக்கு கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரி அருகே போட்டிகள் நடைபெறுகின்றன. மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக போட்டிகள் நடத்தப்படும்.
13 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ தொலைவும், 15 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ, 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்களெனில் 20 கி.மீ., மாணவிகள் 15 கி.மீ தொலைவும் ஓட்ட வேண்டும்.
வயதுச் சான்றினை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வரவேண்டும். இதற்கான நுழைவுப் படிவத்தை மாணவ, மாணவிகள் தனித்தனியாக கொண்டு வருதல் வேண்டும்.
முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும். 4 முதல் 10 இடம் வரை பெறுபவர்களுக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்துகொள்வோர் சாதாரண சைக்கிளை கொண்டு வரவேண்டும்.
மாணவ, மாணவிகள் தங்களது பெயர்களை வரும் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.