கடலூர் அரசுக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அதற்கான விழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் ப.குமரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் பயின்று 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் பட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். எனவே, இந்த விழாவில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களது பெயரை கல்லூரியின் புள்ளியியல் துறையில் வருகிற 16-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பட்டமளிப்பு விழா பதிவுக் கட்டணமாக ரூ.500, பட்டமளிப்பு விழா அரங்குக்கு வாடகை முன்பணமாக ரூ.250 வீதம் செலுத்த வேண்டும். பட்டம் பெற வருபவர்கள் தங்களுடன் ஒரு விருந்தினரை அழைத்து வரலாம். விழா அரங்கினுள் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக (காலை 9 மணி ) இருக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.