கடலூரில் பாரதியார் நினைவு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
மகாகவியும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான பாரதியாரின் நினைவு தினம் செப்.11-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், கடலூர் துறைமுகம் செட்டி கோயில் திடலில் உள்ள பாரதியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமையில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்புராயன், மாவட்டச் செயலர் பி.கோகிலன், பொருளாளர் ஏ.மாலைமணி, இளைஞர் பேரவைத் தலைவர் சி.வீரமுத்து, மாணவரணி எஸ்.கடல் செல்வம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தேவராஜ், வி.குணசேகரன், ஆர்.சண்முகம், ஜி.கலியமூர்த்தி, கே.முருகையன், வி.சுரேஷ்பாபு, கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரதிதாசன் மன்றம்: கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் அமரகவி பாரதியார் நினைவஞ்சலி கூட்டம் மன்றத் தலைவர் கவிஞர் கடல்.நாகராஜன் தலைமையில் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. செயலர் ராமமூர்த்தி வரவேற்றார்.
ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர் இளங்கோவன், பாரதியார் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். தனிப் பயிற்சி கல்லூரி முதல்வர் செந்தில்முருகன், பாரதியார் கடலூர் மத்திய சிறையில் 25 நாள்கள் இருந்த வரலாற்று செய்தியை நினைவுப்படுத்திப் பேசினார்.
கல்லூரி மாணவ- மாணவிகள் பாரதியார் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மன்றப் பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.