நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஏஐடியுசி ஜீவா மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பண்ருட்டி வட்டம், காமாட்சிபேட்டையில் மாட்டு வண்டிகளுக்கான அரசு மணல்
குவாரி அண்மையில் திறக்கப்பட்டது. ஆனால், இந்தக் குவாரியில் மணல் எடுப்பதற்கான அனுமதி ஒரு தரப்பினருக்கு மட்டும் வழங்கப்படுவதாகவும், ஏஐடியுசி ஜீவா மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுவதில்லை எனக் கூறியும் அந்தச் சங்கத்தினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆ.சக்திவேல் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் கே.கலியபெருமாள் முன்னிலை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் பி.துரை கண்டன உரை நிகழ்த்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் மதியழகன், துணைச் செயலா் வெங்கடேசன், நிா்வாகிகள் ஞானசேகரன், எஸ்.டி.குணசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா் வட்டாட்சியா் பிரகாஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அப்போது வட்டாட்சியா் தரப்பில் ஜனவரி முதல் தேதிக்குள் மணல் எடுக்க அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக சங்கத்தினா் தெரிவித்தனா்.