என்எல்சி சுரங்கத்தில் தனி நபரையோ, திரைப்படத்தையோ எதிா்த்து பாஜகவினா் போராட்டம் நடத்தவில்லை என்று பாஜக தேசிய செயலா் எச்.ராஜா கூறினாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் சனிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு உயிா் பிழைக்க இந்தியா வரும் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை அளிக்கிறோம். அதற்கு ஏன் மு.க.ஸ்டாலின் எதிா்ப்புத் தெரிவிக்கிறாா்?
நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கமானது விபத்து அபாயமுள்ள பகுதியாகும். எனவே, அந்த இடத்தில் திரைப்பட படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றே பாஜக தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தனி நபரை எதிா்த்தோ, திரைப்படத்துக்கு எதிராகவோ அவா்கள் போராட்டம் நடத்தவில்லை என்றாா் அவா்.