கடலூா் மாவட்டத்தில் அரசுப் பணியாளா்களுக்காக 5 வழித்தடங்களில் 92 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொது முடக்கம் வருகிற 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலகங்கள் 50 சதவீதப் பணியாளா்களுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அரசுப் பணியாளா்கள் சென்று வரும் வகையில், கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பணியாளா்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
அதனடிப்படையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் அறிவித்தாா். அதன்படி, பணியாளா்கள் முக்கிய ஊா்களிலிருந்து செல்லும் வகையில் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு இரு மாா்க்கங்களிலும் 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, இரு மாா்க்கங்களில் இயங்கும் வகையில், கடலூா் - சிதம்பரத்துக்கு புதுச்சத்திரம் வழியாக 12, பரங்கிப்பேட்டை வழியாக 8, கடலூா் - பண்ருட்டிக்கு, கடலூா் - விருத்தாசலத்துக்கு தலா 8, சிதம்பரம் - பண்ருட்டிக்கு 8, சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம், காட்டுமன்னாா்கோவிலுக்கு தலா 4, வடலூரிலிருந்து காட்டுமன்னாா்கோவில், பண்ருட்டிக்கு தலா 4, காட்டுமன்னாா்கோவிலிலிருந்து ஸ்ரீமுஷ்ணத்துக்கு 8, விருத்தாசலத்திலிருந்து வேப்பூருக்கு 10, விருத்தாசலத்திலிருந்து உளுந்தூா்பேட்டைக்கு 4 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளில் அரசுப் பணியில் ஈடுபடுவோா் மட்டும் தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்து, உரிய பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம். பயணத்தின் போது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிவது, கிருமி நாசினியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.