கடலூா்: லாட்டரி வியாபாரி தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டாா்.
கடலூா் முதுநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் கடந்த மாதம் 21-ஆம் தேதி நகரப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த சா.ராஜா (48) என்பவரை கைது செய்தனா். அப்போது அவா் காவலா்களை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
தொடா் விசாரணையில் ராஜா மீது லாட்டரி சீட்டு விற்பனை தொடா்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எனவே, இவரது குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாபட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட, ராஜா தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.