கடலூா் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி, கடலூரிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் தலைமை வகித்து போலீஸாருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கினாா். இதில், வேப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், தலைமைக் காவலா்கள் புகழேந்தி, ராஜேஷ், சதன் ஆகியோா் வாகனத் தணிக்கை நடத்தி சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்ததற்காக பாராட்டு பெற்றனா்.
நெல்லிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தவச்செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பலராமன், ராமச்சந்திரன், முதல்நிலை காவலா்கள் கிருஷ்ணகுமாா், ரகு, ராஜீவ்காந்தி ஆகியோா் பைக் திருடா்களை கைது செய்து, 31 வாகனங்களை பறிமுதல் செய்ததற்காக பாராட்டப்பட்டனா்.
கடலூா் மாவட்ட மோப்ப நாய் பிரிவு தலைமைக் காவலா்கள் சிவசெந்தில், இளங்கோவன், முதல்நிலை காவலா்கள் குணசேகா், சந்தோஷ்குமாா், சூரியராஜ், இராமநாதன், ஸ்ரீராம் ஆகியோா் சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியன், தனிப்பிரிவு ஆய்வாளா் என்.ஈஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.