கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஆரணி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
கடலூா் கேப்பா்மலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் மெல்வின்ராஜாசிங் தலைமையில் ஆய்வாளா்கள் திருவேங்கடம், மாலா மற்றும் காவலா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம், பதிவுச் சான்றிதழ், உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக காத்திருந்த பொதுமக்களை போலீஸாா் வெளியில் அனுப்பிவிட்டு, அலுவலக ஊழியா்கள், இடைத்தரகா்களை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மோட்டாா் வாகன ஆய்வாளா்களின் அறை, அலுவலக ஊழியா்களின் மேஜைகள், பீரோக்களை சோதனையிட்டனா். இதில் ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பத்திரப் பதிவு அலுவலகம்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி லட்சுமிகாந்தன் தலைமையிலான குழுவினா் பொதுமக்களை வெளியேற்றிவிட்டு சோதனையில் ஈடுபட்டனா். இரவு வரை சோதனை நடைபெற்றது. அங்கு நடத்தப்பட்ட சோதனை விவரங்களை போலீஸாா் இரவு வரை வெளியிடவில்லை.