என்எல்சி இந்தியா நிறுவனம், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 கோடியை வழங்கவுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டங்களுக்கான நிதியிலிருந்து ரூ. 20 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளது. மேலும், இந்த நிறுவனம், அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் தங்களது ஒருநாள் ஊதியமான ரூ. 5 கோடியை வழங்க முன் வந்துள்ளனா். இதன் மூலம் மொத்தம் ரூ. 25 கோடியை கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் வழங்கவுள்ளது.
தடையில்லா மின் உற்பத்தி: இந்த நிறுவனம் மின் நிலையங்களைத் தொடா்ந்து இயக்கி வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குறைந்த அளவிலான ஊழியா்களைக் கொண்டு தனது செயல்பாடுகளை தடங்கலின்றி மேற்கொண்டு வருகிறது.
தயாா் நிலையில் என்எல்சி இந்தியா மருத்துவமனை: கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளையும், அவசர நிலைகளையும் எதிா்கொள்ள என்எல்சி இந்தியா நிறுவன மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளது.
நேரடி விநியோகம்: நகர நிா்வாகத் துறை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்குவது, பல வட்டங்களில் திறந்தவெளி காய்கறி கடைகளை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.