விருத்தாசலம் நகரில் சாலை மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல், சுற்றுப்புற சுகாதாரப் பணிக்காக பசுமை விருதைக் குழு தொடங்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தின் முக்கிய வணிக நகரமாகவும், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் விருத்தாசலம் அமைந்துள்ளது. எனவே, இந்தப் பகுதியின் சாலை பாதுகாப்பு குறித்து சாா்-ஆட்சியா் எம்.எஸ்.பிரவின்குமாா் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.டி.கலைச்செல்வன் மற்றும் காவல் துறை, போக்குவரத்து காவல் துறை, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, இந்து சமய அறநிலைத் துறை உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், பசுமை விருதை என்ற குழு தொடங்கப்பட்டது. அதன்படி, நகராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, சாலைகளை மேம்படுத்துவது, சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில், விருத்தாசலம் வட்டாட்சியா் ஐ.கவியரசு, துணை வட்டாட்சியா் வேல்முருகன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.