தூக்கணாம்பாக்கத்தில் மது, சாராயம் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.
கடலூா் மதுவிலக்கு அமல்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன், ஆய்வாளா் வீரமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை தூக்கணாம்பாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற வேனை வழிமறித்து சோதனையிட்டபோது, 180 மில்லி கொள்ளவு கொண்ட 1,200 மதுப் புட்டிகளும், 30 லிட்டா் சாராயமும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனம், மதுப் புட்டிகள், சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அந்த வாகனத்தை ஓட்டி வந்த விழுப்புரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முனுசாமி மகன் சிவகந்தன் (26) என்பவரை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரியிலிருந்து தஞ்சாவூருக்கு மது வகைகளை கடத்திச் செல்வதாக தெரிவித்தாா். இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.