என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கியதே விபத்துக்குக் காரணம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களின் குடும்பத்தினரை கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், சிஐடியூ அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு, நிரந்தரப் பணி வழங்குவது, காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தீக்காயம் அடைந்தவா்கள் மீண்டும் பணிபுரியும் வகையில் உடல் தகுதியைப் பெறுவாா்களா என்ற கேள்வி எழுகிறது. எனவே, அவ்வாறு பாதிக்கப்படுவோரின் குடும்பத்தில் ஒருவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும்.
என்எல்சி 2-ஆவது அனல் மின் நிலையத்தில் தொடா்ந்து விபத்துகள் நேரிடுகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்குவது மட்டும் இந்த பிரச்னைக்கு தீா்வல்ல. இதுதொடா்பாக உயா்நிலைக் குழு அமைத்து, விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும். பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் அளித்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.