கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காத ஜவுளிக் கடைகளின் உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கரோனா வைரஸை கட்டுப்படுத்த 10-க்கும் மேற்பட்டோா் பணிபுரியும் வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பண்ருட்டியில் இந்த உத்தரவை சில நிறுவனங்கள் கடைப்பிடிக்கவில்லை என புகாா் எழுந்தது.
இந்த நிலையில், பண்ருட்டி நகராட்சி ஆணையா் (பொ) எஸ்.பிரபாகரன், பொறியாளா் மகாராஜன், மண்டல கண்காணிப்பாளா் ஆனந்தன், சுகாதார ஆய்வாளா் பாக்கியநாதன் ஆகியோா் அன்னை இந்திரா காந்தி சாலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு திறந்திருந்த பெரிய ஜவுளிக் கடையை உடனடியாக மூட உத்தரவிட்டனா். மேலும் அந்தக் கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனா். இதேபோல மற்றொரு ஜவுளிக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.