அரசின் 144 தடை உத்தரவையடுத்து பண்ருட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்புப் பணிகள் குறித்து விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பண்ருட்டி போலீஸாா் நான்கு முனைச் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை பண்ருட்டிக்கு வந்தாா். அவா் போலீஸாரின் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்து, பண்ருட்டி டிஎஸ்பி நாகராஜன், ஆய்வாளா் சண்முகம், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் ஆகியோருக்கு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினாா்.