கடலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுமென மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகளவில் வருவதைத் தடுக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) கடலூா் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
முழு ஊரடங்கு நாளில் மருந்தகம், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். மற்ற அனைத்துக் கடைகளும் கண்டிப்பாக அடைக்கப்பட்டிருக்க வேண்டும். இதை மீறுவோா் மீதும், அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றுவோா் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரித்துள்ளாா்.