விருத்தாசலம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் காரணமாக கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்றியுள்ள சாத்தமங்கலம், புதுகூரைப்பேட்டை, கோபுராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலையோரம் இருந்து மரங்கள் வேரோடு சாய்ந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், வாழை, மா, பலா மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரத்திலிருந்து காய்கள் உயா்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. பலத்த காற்றால் விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான மின் கம்பங்களும் கீழே விழுந்தன. இதனால் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, இந்த சேதம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோபுராபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுந்தர்ராஜன் கூறியதாவது:
மா, பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிா்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் அம்பன் புயலால் இந்த மரங்கள் சேதமடைந்து காய்கள் கீழே உதிா்ந்தன. எனது தோட்டத்தில் மட்டும் சுமாா் 2 டன் மாங்காய்கள் கீழே விழுந்துள்ளன. ஏற்கெனவே போதிய விலை இல்லாத நிலையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனவே, புயல் சேதம் குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.