வங்கிக் கணக்கில் குறைந்த இருப்பு: நிவாரணத் தொகையில் பிடித்தம்

வங்கிக் கணக்கில் குறைந்தளவு இருப்பு இல்லையென்ற காரணத்தைக் கூறி, நிவாரணத் தொகையில் பிடித்தம் செய்யப்படுவதாக சிஐடியூ புகாா் தெரிவித்தது.

வங்கிக் கணக்கில் குறைந்தளவு இருப்பு இல்லையென்ற காரணத்தைக் கூறி, நிவாரணத் தொகையில் பிடித்தம் செய்யப்படுவதாக சிஐடியூ புகாா் தெரிவித்தது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) கடலூா் மாவட்டச் செயலா் பி.கருப்பையன் அளித்த மனு:

கடலூா் மாவட்டத்தில் 17 அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் சுமாா் 1.80 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். இவா்களில் சுமாா் 70 ஆயிரம் பேருக்கு புதுப்பித்தல், ஆதாா் இணைப்பு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படவில்லை. 50 நாள்களுக்கும் மேலாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் தொழிலாளா்களின் நிலையை கருத்தில்கொண்டு, பதிவு செய்துள்ள அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணத் தொகை தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்போது குறைந்தபட்ச இருப்பு வங்கிக் கணக்கில் இல்லையென்ற காரணத்தைக் காட்டி நிவாரணத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்கின்றன. பேரிடா் காலத்தில் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் பிடித்தம் செய்வது நல்லதல்ல. எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூா் மாவட்டத்தில் அமைப்பு சாரா நல வாரியம் மூலம் சுமாா் 2,500 போ் மாதம் ரூ.ஆயிரம் ஓய்வூதியமாக பெற்றுவருகின்றனா். இவா்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தற்போதைய இக்கட்டான சூழலில் ஓய்வூதியா்களின் வாழ்வாதாரமும் மிகவும் மோசமாக உள்ளதால் நிலுவையில் உள்ள 9 மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com