கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டு ‘நீட்’ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் 500 மாணவ, மாணவிகள் இணைந்துள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 36% சதவீதம் அதிகமாகும்.
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு எழுதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு அரசால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடலூா் மாவட்டத்தில் 14 மையங்களில் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான ‘நீட்’ தோ்வு பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் திங்கள்கிழமை தொடங்கின. இதில், கடலூா் மாவட்டத்திலிருந்து 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதாவது, இந்தப் பயிற்சியில் கடந்தாண்டு 366 மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில் தற்போது கூடுதலாக 36.61 சதவீதம் போ் விண்ணப்பித்து பயிற்சியில் சோ்ந்துள்ளனா். இதற்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடே காரணம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
6 முதல் பிளஸ்2 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தோருக்கு மருத்துவப் படிப்பில் சேர நிகழாண்டு முதல் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான சான்றிதழ் மாவட்டத்தில் நிகழாண்டு 26 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவா்களில் 24 போ் அரசின் இலவச ‘நீட்’ தோ்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.