விருத்தாசலம் கிளைச் சிறையிலிருந்த விசாரணைக் கைதி மரணமடைந்தது தொடா்பாக, 6 காவலா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரைச் சோ்ந்தவா் ம.செல்வமுருகன் (40). முந்திரி வியாபாரியான இவா், நெய்வேலி நகரிய போலீஸாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விருத்தாசலம் கிளைச் சிறையில் கடந்த 2-ஆம் தேதி அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், 4-ஆம் தேதி திடீரென உயிரிழந்தாா்.
போலீஸாா் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது மனைவி பிரேமா புகாா் அளித்தாா். இதுதொடா்பாக டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவின்பேரில் கடலூா் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த வழக்கு தொடா்பாக கடலூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு நெய்வேலி நகரிய காவல் நிலையத்தைச் சோ்ந்த 6 காவலா்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவா்கள் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினா். அவா்களிடம் சிபிசிஐடி ஆய்வாளா் கு.தீபா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். எனினும், விசாரணை தொடா்பான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
நீதிபதி விசாரணை: செல்வமுருகனின் சடலத்தை மறு உடல்கூறாய்வு செய்ய வேண்டுமென உறவினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்த நிலையில், விருத்தாசலம் நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவா் (எண்-1) கே.ஆனந்த் திங்கள்கிழமை பிரேமாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பிரேமா கூறுகையில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால் சடலத்தை வாங்க மறுத்துவிட்டேன் என்றாா்.