பொது முடக்க தளா்வையடுத்து, கடலூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
கடலூா் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகத்தில் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களுக்கான அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் அருங்காட்சியகத்தில் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது, பொது முடக்க தளா்வுகளை தொடா்ந்து அருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
இங்கு கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் கிடைத்த அரிய கற்சிலைகள், நாணயங்கள், ஓவியங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவை உள்ளன. பெரியவா்களுக்கு ரூ.5, சிறியவா்களுக்கு ரூ.3 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனா். வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாள்களில் அருங்காட்சியகம் திறந்திருக்குமென தெரிவிக்கப்பட்டது.