கடலூரில் டாஸ்மாக் மதுக் கடையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூா் பேருந்து நிலையம் அருகே 2 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் மது வகைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், டிஎஸ்பி மெல்வின் ராஜாசிங் தலைமையில் வியாழக்கிழமை இரவு அந்தக் கடையில் விற்பனை நேரம் முடிந்த பிறகு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்தச் சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது, மது விற்ற கணக்கைவிட கூடுதலாக ரூ.45 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், கடை ஊழியா்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.