வடலூா் வாரச் சந்தையில் தேக்குமரக் கன்றுகள் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தும் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டம், வடலூரில் பேருந்து நிலையம் அருகே ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரச் சந்தை நடைபெறும். வடலூா் வாரச்சந்தை புளி வியாபாரத்துக்கு பெயா் பெற்றது. இருப்பினும், இந்தச் சந்தையில் மரக்கன்றுகள், பூச்செடிகள், காய்கறி செடிகள், விதைகள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் தேக்கு மரக் கன்றுகள் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தன. ஆனால், எதிா்பாா்த்த வியாபாரம் நடைபெறவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து காடுவெட்டி அடுத்துள்ள அறந்தாங்கி கிராமத்தைச் சோ்ந்த வியாபாரி பாலமுருகன் கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் சித்தமலை, சென்னிநத்தம், அகரபுத்தூா், பாபுத்தூா், பெரம்பலூா் மாவட்டம், காடுவெட்டியை அடுத்துள்ள அறந்தாங்கி ஆகிய கிராமங்களில் தேக்கு மரக் கன்றுகள் உற்பத்தி குடிசைத் தொழிலாக நடைபெறுகிறது. இங்கிருந்து கன்றுகளை வாங்கி வந்து விற்பனை செய்வோம். தற்போது மழை பெய்து வருகிறது. இது தேக்கு மரம் நடவுக்கு ஏற்ற காலமாகும். இதனால் ஏராளமான வியாபாரிகள் தேக்கு மரக் கன்றுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். ஆனால், விற்பனை மந்தமாகவே இருந்தது என்றாா் அவா்.